காரைநகரின் கண்ணே அருணாசலம் என்கின்ற நடமாடும் சைவத் திருமலை ஒன்று 1864 ஆம் ஆண்டிலே தோன்றலாயிற்று. 56 ஆண்டுகள் ஒளி விரித்து உயர்ந்து விளங்கிய அருணாசலம் 1920 ஆம் ஆண்டிலே மறைந்து விட்ட போதிலும் அதன் பேரொளியின் சாயல் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக யாழ்ப்பாண நன்னகரில் படிந்து புதுமை செய்து நிற்பதை நாம் காணலாம்.
இந்த நிலையிலேதான் நம் காரைநகர் மக்களைப் பார்த்து பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் கேள்வி எழுப்பினார்.
“காரைநகரமே! உனக்கு ஒரு குறையும் இல்லையே! நீ நல்ல செல்வப் பிரபு. உனது கருத்து என்ன?” என்று திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலைப் பேராசான் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் 1945 ஆம் ஆண்டளவில் காரைநகர் இந்துக் கல்லூரி வெளியீடாகிய சயம்பு மலரில் எழுதியிருந்தார்.
சைவ உலகமே! செல்வப் பிரபுவே காரைநகரமே! நீ அந்த மகானை மறந்துவிட்டாயா? என்று மீண்டும் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களே1967 ஆம் ஆண்டில் காரைநகர் சைவ மகாசபையினால் வெளியிடப்பட்ட பொன் விழா மலரில் சற்று உரத்த தொனியில் கேள்வி எழுப்பினார்.
இந்த வினாக்களுக்கு விடையாக காரைநகர் சைவ மகாசபை திரு.சி.கணபதிப்பிள்ளை ஐயர் அவர்கள் எழுதிய மகான் அருணாசலம் அவர்களின் சரிதத்தையும் அவரின் அளப்பரிய பணிகளையும் உள்ளடக்கிய “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூலை1971 ஆம் ஆண்டில் வெளியிட்டது.
இந்நூலின் மூலப்படியுடன் மகான் ச.அருணாசலம் அவர்கள் பற்றிய மேலும் கட்டுரைகள், தகவல்கள் அடங்கிய இரண்டாம் பதிப்பு கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கடந்த ஜுலை மாதம் கனடாவில் வெளியிடப்பட்டிருந்தது.
மேற்படி நூலின் வெளியீட்டு விழா காரைநகரில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய (காரைநகர் இந்துக் கல்லூரி) நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (20.12.2015) அன்று பிற்பகல் 2:30 இற்குஓய்வுநிலை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் கல்வியாளர்கள், சைவத்தமிழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு நூலின் சிறப்புப் பிரதிகளைப் பெற்று சிறப்பிக்குமாறு காரைநகர் நூல் வெளியீட்டுக் குழு வேண்டுகோள் விடுக்கின்றது.
விழாவின் நிகழ்ச்சி நிரலினைக் கீழே காணலாம்.
No Responses to “காரைநகரில் 20.12.2015 அன்று மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களுக்கு பெருவிழா”