சுவிற்சலாந்து காரை அபிவிருத்தி சபையின் பதினோராவது ஆண்டு கலை விழாவாகிய “காரை தென்றல் – 2015” கடந்த செப்டம்பர் 13, 2015 அன்று சுவிற்சலாந்தில் வாழும் காரை குடும்பங்களின் பேராதரவுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
காரை தென்றல்-2015 விழாவிற்கு பிரதம விருந்தினராக காரைநகரிலிருந்து வருகை தந்திருந்த எதியோப்பியா பல்கலைக்கழக ஆங்கிலத்துறைப் பேராசிரியர் கலாநிதி.ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். நிகழ்வில் சுவிஸ் வாழ் வளர்ந்து வரும் இளம் சிறார்களின் இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்வுகள் அரங்கேறியிருந்தன. காரை தவில், நாதஸ்வர கலைஞர்கள் மங்கள இசை வழங்கி சிறப்பித்திருந்தனர்.
இவ்விழாவில் ஈழத்துக் கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு ச.அருணாசலம் அவர்கள் பற்றிய சரித்திர நூலாகிய ‘சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்’என்ற நூலும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தமை விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதாக அமைந்திருந்தது.
காரைநகர் சைவ மகா சபையினால் 1971 ஆம் ஆண்டு முதற்பதிப்பாக வெளியிடப்பட்ட இந்நூல் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய மேலும் கட்டுரைகள் அடங்கிய இரண்டாம் பதிப்பாக கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கடந்த ஜூலை மாதம் கனடாவில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நூல் பற்றிய அறிமுக உரையை காரைநகர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான முன்னாள் ஆசிரியரும், விளையாட்டு ஆர்வலரும், சமூகத் தொண்டரும், பிரான்ஸ் காரை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவருமாகிய திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேரு மாஸ்ரர்) அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.
அவர் தனது உரையில் காரைநகரில் சைவ மகா சபையின் முதல் வெளியீட்டுக்கு பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் அரும்பணியாற்றினார். தற்பொழுது கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவர் சிவநெறிச்செல்வர் திரு.தி. விசுவலிங்கம் அவர்களின் அதீத உழைப்பினால் இந்நூல் மறுபிரசுரமாக வெளிவந்துள்ளது. அருணாசலம் உபாத்தியார் வடமாகாணத்தில் சைவத் தமிழ் பாடசாலைகளை நிறுவுவதற்கு அரும்பணியாற்றினார், அவர்கள் இல்லாதவிடத்து காரைநகரில் சைவமும் தமிழும் தளைத்தோங்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பணியை அவருக்குப் பின் அருணாசலம் உபாத்தியார் முன்னெடுத்து வந்தார். இந்நூலினை அவருடைய பேரனார் பேராசிரியர் சிவபாதம் பரமசிவம் அவர்கள் கனடாவில் வெளியிட்டு வைத்தார். அருணாசலம் உபாத்தியார் சைவத்திற்கும் தமிழுக்கும் செய்த அரும்பணிகள் நிறையவே உண்டு. நேரத்தினை கருத்தில் கொண்டு நிறைவு செய்கின்றேன் எனவும் இந் நூல் எல்லோர் இல்லங்களிலும் இருக்கவேண்டிய அரும் காப்பியம் என்றும் குறிப்பிட்டார்.
நூலினை சூரிச் விஸ்ணு துர்க்கை அம்மன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ. த. சரவணபவானந்த குருக்கள் அவர்கள் வெளியிட்டு வைத்தார். நூலின் முதல் பிரதியை சைவசமய ஆர்வலரும், சமூகத் தொண்டரும் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவருமாகிய திரு. நல்லதம்பி சரவணப்பெருமாள் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து பிரதிகளை சூரிச் நகரிலிருந்து தொலைதூரம் வாழ்ந்தாலும் சுவிஸ் காரை அபிவிருத்தி சபைக்கு தொடர்ச்சியாக தனது ஆதரவினை வழங்கி வரும் திரு. சிவசுப்பிரமணியம் திரவியபவான் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அடுத்து சைவத் தமிழ் பாரம்பரியத்தை காத்த எமது ஊர்ப் பெருமகன் அருணாசலம் அவர்களின் சரிதத்தை எமது அடுத்த தலைமுறையினர் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் மாணவி செல்வி சுபாஜினி சற்குணராஜா அவர்கள் நூலின் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
ஈழமணித்திருநாட்டின் சைவக் கல்விப் பாரம்பரியத்தை அந்திய சக்திகளின் ஆதிக்கத்தில் அழிந்து போகாமல் பாதுகாத்த கடமை வீரர் காரைநகர் மகான் சிவத்திரு ச.அருணாசலம் அவர்களுக்கு தமது நன்றிக் கடனைச் செலுத்தி இவ்வாண்டு சூரிச் நகரில் வீசிய காரைத் தென்றலை சுவிற்சலாந்து வாழ் காரை மக்கள் அர்த்தமுள்ளதாக்கியிருந்தனர் என்று கூறலாம்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “சுவிற்சலாந்தில் நடைபெற்ற ‘சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்அவர்கள்’ நூல் அறிமுகம்”